வைகறை மெல்லொளி

தெங் வம்ச பரம்பரையின் ஆட்சிக் காலத்தில் சமுக நலத்துறைத் தேர்வு நடத்தும் பொருப்பாளாராக இருந்த "தான் ஸியா" (அர்த்தம், வைகறையின் சிவப்பு மெல்லொளி) பிற்காலத்தில் புத்தத் துறவியாக மாறினார். பின்பு தான் வசித்த ஸென் மடத்தின் தர்மா ஆசிரியராகவும் இருந்தார்.

ஒரு குளிர்கால இரவில், திடிரென அடித்த பெரிய பனிப் புயலில் ஸென் மடம் இருந்த இடம் நகரத்திலிருந்து துண்டிக்கப் பட்டு விட்டது. புயலின் காரணமாக அடுப்பு எரிக்கும் கரியை எடுத்துக் கொண்டு வருபவனால் நகரத்திலிருந்து ஸென் மடம் இருக்கும் இடத்திற்கு வரமுடிய வில்லை. ஸென் மடத்தில் முன்பு வாங்கி வைத்திருந்த கரி அனைத்தும் ஒரிரு நாட்களிலேயே தீர்ந்து போய் விட்டது. ஸென் மடத்தில் வசித்து வந்த பிக்ஷுக்களால் உணவு சமைக்க முடியவில்லை. குளிர்காலம் ஆனதால் மடத்தில் இருந்த அனைவரும் கடும் குளிரினால் வெடவெடத்து நடுங்கினர். சூடேற்றி குளிர்காய்வதற்கு எதுவும் இல்லாமல் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தனர்.

ஆசிரியர் தான் ஸியா அங்கு மக்கள் கும்பிடுவதற்காக வைத்திருந்த மரத்தினால் செய்யப் பட்ட புத்தர் சிலைகளில் ஒன்றிரண்டினை எடுத்து தீ எரிக்கும் அடுப்பினில் போட்டு கொளுத்த ஆரம்பித்தார்.

அடுப்பில் தெய்விக புத்தர் சிலைகளைப் போட்டு கொளுத்துவதைப் பார்த்த மற்ற பிக்ஷுக்கள் அதிர்ச்சியடைந்து, "ஏன் நமது சமயத்தின் தெய்விக கலைப் பொருட்களைப் போட்டு கொளுத்துகிறாய், இது புத்தரை அவமதிக்கும் செயலாகும்? நீ என்ன செய்கிறாய் என்று தெரிந்து தான் செய்கிறாயா? எதற்காக இப்படிச் செய்கிறாய்" என்று கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தனர்.

"இந்த புத்தர் சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா? இவைகளுக்கு புத்தத் தன்மைதான் இருக்கிறதா?" என்று கேட்டார் தான் ஸியா.

"இல்லவே இல்லை, இந்தச் சிலைகள் மரத்தினால் செய்யப் பட்டவை, இவைகளுக்கு புத்தத் தன்மை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை" என்று அனைவரும் கும்பலாக பதில் கூறினர்.

"அப்படியானால், அவை மரக்கட்டைதானே, விறகாக அடுப்பு எரிப்பதில் எந்தத் தவறும் இல்லைதானே?" என்று கேட்டு விட்டு "கொஞ்சம் அந்தப் பக்கத்தில் இருக்கும் அந்த மரக்கட்டையை எடுத்துக் கொடுக்க முடியாமா? இன்னும் கொஞ்சம் கதகதப்பு தேவைப்படுகிறது" என்று மற்றொரு மரக்கட்டையால் செய்த புத்தர் சிலையையும் வாங்கி அடுப்பில் போட்டு எரிக்க ஆரம்பித்தார்.

அதற்கு மறுநாள், புயல் காற்றானாது ஒய்ந்தது. ஆசிரியர் தான் ஸியா பக்கத்தில் இருந்த நகரத்திற்கு சென்று எரிந்த புத்தர் சிலைகளுக்கு பதிலாக வேறு சிலைகளை வாங்கி வந்தார். அவைகளை முறையாக முன்பு இருந்த இடத்தில் அழகாக வைத்தார். அதன் பிறகு ஊதுபத்தி மற்றும் நறுமணப் பொருட்களை கொளுத்தி வைத்தார்.

அனைத்தையும் அலங்கரித்து முடித்தவர், அந்த சிலைகளுக்கு முன்னால் மண்டியிட்டு குனிந்து வணங்க ஆரம்பித்தார்.

"மரக்கட்டையை ஏன் வணங்கிக் கொண்டிருக்கிறாய்?" என்று குழப்பம் அடைந்த மற்ற புத்த பிக்ஷுக்கள், தான் ஸியாவை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.

"இல்லை, நான் இந்த சிலைகளை தெய்விகக் கலைப் பொருட்களாக நினைத்து வணங்கி புத்தாவுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறேன்" என்றார் தான் ஸியா.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts