கன்னியாகுமரி பகவதி அம்மன் கதை

இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் அமைந்திருக்கும் இந்தக் கன்னியா குமரிப் பிரதேசத்துக்கு அப்பெயர் வரக்காரணமாக இரண்டு விடயங்களை அறிஞர்கள் ஊகங்களாகக் குறிப்பிடுகின்றனர்.

சிவபெருமானை அடைய வேண்டுமென்பதற்காக கன்னியான பார்வதிதேவி இந்த முனையிலே நின்று தவம் செய்தமையால் ‘கன்னியாகுமரி’ என்ற பெயர் வழங்கப்பட்டு வருவதாகவும், குமரிக் கண்டம் அழிந்த பிறகு, அங்கிருந்து வந்த பெண் தனது நாயகனுக்காகக் காத்திருந்த இடம் என்ற கருத்துடன் இந்தப் பெயர் வந்திருக்கலாமெனவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

முதலாவது கரத்தின் பின்னணியிலிருக்கும் புராணக்கதை மிகவும் சுவாரசியமானது. முன்னொரு காலத்திலே, அசுரர்கள், தேவர்களை அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. 

அசுர குலத்தலைவனாக விளங்கிய பாணாசுரன் மூவுலகையும் தனக்குக் கீழே கொண்டுவர எண்ணினான். விண்ணவருக்கும் முனிவர்களுக்கும் பூவுலக மாந்தருக்கும் பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தான்.

பாணாசுரனின் கொட்டத்தைத் தாங்க முடியாத பூமாதேவி திருமாலை வேண்டி நின்றாள். அவளது வேண்டுகோளுக்குச் செவிசாய்த்த திருமாலோ, பராசக்தியை அணுகும்படி கூறினார். 

அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி, பெரிய யாகமொன்றை மேற்கொண்டனர். யாகத்தின் முடிவில் வெளிப்பட்ட பராசக்திதேவி பாணாசுரனின் கொட்டத்தை அடக்கி உலகில் அறமும் ஒழுங்கும் நிலைபெற வழிசெய்வதாக உறுதியளித்தாள்.

அதற்காக அவள் கன்னிப் பெண்ணாக மாறி பாரதத்தின் தென் கோடிக்கு வந்து தவம் செய்யலானாள். கன்னிதேவி மணப்பருவத்தை அடைந்ததும், சுசீந்திரத்திலிருக்கும் இறைவானாகிய சிவபெருமான் கன்னியாகிய தேவி மீது காதல் கொண்டார். அவருக்கு தேவியைத் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. 

பிரம்மதேவனோ, அசுரர்களின் தலைவனாகிய பாணாசுரனின் மரணம் ஒரு கன்னியாலேயே நிகழ வேண்டுமென விதித்திருந்தான். இந்தத் திருமணம் நிகழ்ந்தால், பாணாசுரனின் மரணம் சம்பவிக்காமலே போய்விடுமென உணர்ந்த நாரதரோ, திருமணத்தை எப்படி நிறுத்தலாமெனச் சிந்திக்கத் தொடங்கினார்.

கலகங்கள் விளைவிப்பதில் நாரதரைவிடச் சிறந்தவர் எவருமில்லை என்பது யாவரும் அறிந்ததோர் விடயமே! ஆனால் நாரதர் கலகம் எப்போதும் நன்மையிலேயே முடிந்திருக்கிறது. 

புதிய வியூகத்தால் தேவி – சிவபெருமான் திருமணத்தை நிறுத்த முயன்ற நாரதர் அவர்கள் இருவரையும் அணுகி, குறித்த ஓர்நாள், நள்ளிரவிலான நல்வேளையொன்றில் திருமணம் நிகழ வேண்டுமெனவும், அதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கூறினார். அதன்படி குறித்த நாளன்றிரவு சிவபெருமான் சுசீந்திரத்திலிருந்து தேவியின் இடத்தை நோக்கிப் புறப்பட்டார். 

நல்ல நேரம் தவறிவிடக் கூடாதென்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. போகும் வழியிலே வழுக்கம் பாறையென்ற இடத்தில் நாரதர் ஒரு சேவலாக உருக்கொண்டு உரக்கக் கூவினார்.

சேவலின் கூவலைக் கேட்ட சிவபெருமானோ பொழுந்து புலர்ந்து விட்டது. நல்ல நேரம் தவறிவிட்டது என எண்ணி மிகுந்த வருத்தத்துடன் சுசீந்திரம் திரும்பினார். 

சிவபெருமானுக்காகக் காத்திருந்த தேவி, அவர் வராததால் என்றும் கன்னியாகவே இருப்பதாக உறுதிபூண்டு மீண்டும் தவம் செய்யத் தொடங்கினாள்.

தேவியின் அழகைப்பற்றிக் கேள்வியுற்ற பாணாசுரனோ, கடுத்தவமிருக்கும் தேவியைக் காண வந்து, அவளை மணம் செய்யும் தனது விருப்பத்தைத் தெரிவித்தான். தேவியோ மறுத்துவிட, பாணாசுரன் தன் உடல் வலிமையால் அவளைக் கவர்ந்து செல்ல எண்ணித் தன் உடைவாளை உருவினான். 

இந்தத் தருணத்தை எதிர்பார்த்திருந்த தேவியும் தன் போர் வாளை வீசிப்பல நாட்கள் போர் புரிந்தாள். இறுதியில் தன் சக்கராயுதத்தால் பாணாசுரனைக் கொன்றாள். தேவர்களும் மனிதர்களும் தேவிக்கு நன்றி செலுத்தினர். 

அவர்களை வாழ்த்திய தேவி தன் தவத்தை மீண்டும் தொடர்ந்தாள். தேவி பாதம் பதித்துத் தவம் செய்த பாறை இன்னும் காணப்படுகிறது என கூறுவர். தெளிவான ஆதாரங்கள் இல்லாத போதிலும் காலம் காலமாக இந்தக் கதை கூறப்பட்டு வருகிறது.
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts