போதிதர்மரின் வழிகள்

புத்தருக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு போதி தர்மர் சீனா போய் சேர்ந்த பொழுது அங்கு ஏற்கனவே 30,000 புத்தமத கோவில்களும் மடாலயங்களும் மேலும் 2,00,000 புத்த பிட்சுக்களும் சீனாவிலிருந்தனர். இரண்டு லட்சம் புத்த பிட்சுக்கள் எனபது சிறிய எண்ணிக்கையல்ல. அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவிகிதம்.

பிரயக்தாரா, போதிதர்மருடைய குரு, அவரை சீனாவுக்கு அனுப்பினாள், ஏனெனில் அவருக்கு முன்பு சீனாவுக்கு சென்ற மக்கள் ஞானமடைந்தவர்களாக இல்லாத போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள், மிகவும் கட்டுக்கோப்பான மக்கள், மிகவும் அன்பானவர்கள், அமைதியானவர்கள், கருணை கொண்டவர்கள் ஆனால் யாரும் ஞானமடைந்தவர்களல்ல. மேலும் இப்போது சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவைப்பட்டார், நிலம் தயாராயிருந்தது. சீனாவை சென்றடைந்த முதல் ஞானமடைந்த மனிதர் போதிதர்மர்தான்.

நான் தெளிவாக்க விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌளதமபுத்தர் அவருடைய சங்கத்தில் பெண்களுக்கு தீட்சையளிக்க அச்சப்பட்டார். போதிதர்மர் கௌளதமபுத்தரின் பாதையில் வந்த போதிலும் ஒரு பெண்ணால் தீட்சை பெறும் அளவுக்கு தைரியமுடையவராயிருந்தார். அங்கு மற்ற ஞானமடைந்த மக்கள் இருந்தனர். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தார். இந்த காரணம் என்னவென்றால் ஒரு பெண்ணாலும் ஞானமடைய முடியும், அது மட்டுமல்ல, அவளுடைய சீடர்களும் ஞானமடைய முடியும் என்பதை காட்டுவதற்காகவே. எல்லா புத்தமத ஞானமடைந்த மக்களுக்கிடையிலும் போதிதர்மர் பெயர் தனித்து நிற்கிறது. அது கௌளதமபுத்தருக்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த மனிதரைப்பற்றி பல செவிவழி செய்திகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏதோ ஒரு முக்கியத்துவம் உள்ளது.

முதல் செவிவழி செய்தி : அவர் சீனாவை அடைந்தபோது – சீனாவை சென்றடைய அவருக்கு மூன்றாண்டுகள் ஆயின. – அவரை வரவேற்க சீனப்பேரரசர் வூ வந்திருந்தார். போதிதர்மருடைய புகழ் அவருக்கு முன்பாக அங்கு சென்றடைந்திருந்தது. பேரரசர் கௌதமபுத்தருடைய தத்துவத்திற்கு சிறந்த சேவை செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பண்டிதர்கள், புத்தமத புத்தகங்களை பாலிமொழியிலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர், மேலும் பேரரசர் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு சிறந்த காவலராக விளங்கினார். அவர் ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் மடாலயங்களை கட்டியிருந்தார். மேலும் அவர் ஆயிரக்கணக்கான பிட்சுக்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அவர் அவருடைய முழு பொக்கிஷத்தையும் கௌதமபுத்தரின் சேவைக்காக செலவழித்துக் கொண்டிருந்தார். அதனால் போதிதர்மருக்கு முன்பு அங்கு சென்ற புத்தபிட்சுக்கள் அனைவரும் பேரரசரிடம் அவர் பெரிய புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் சொர்க்கத்தில் ஒரு கடவுளாக அவதரிப்பார் எனவும் சொல்லி வந்திருந்தனர்.

எனவே அவர் போதிதர்மரிடம் கேட்ட முதல் கேள்வியே, “நான் பல மடாலயங்களை கட்டியுள்ளேன், பல பண்டிதர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்த தத்துவங்களை படிப்பதற்காக நான் ஒரு பல்கலைகழகத்தையே நிறுவியுள்ளேன், நான் இந்த முழு பேரரசையும் அதன் பொக்கிஷங்களையும் கௌதமபுத்தரின் சேவைகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். அதற்குப் பரிசாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதாக இருந்தது.

போதிதர்மரைப் பார்த்து அவருக்கு சிறிது அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதர் இப்படி இருப்பார் என அவர் நினைக்கவேயில்லை. போதிதர்மர் மிகவும் கோபக்காரராக காட்சியளித்தார். அவர் மிகப்பெரிய கண்களை கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு மென்மையான மலர் போன்ற இதயத்தை – ஒரு தாமரை மலரை போன்ற இதயத்தை – கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முகம் உன்னால் எவ்வளவு அபாயகரமாக கற்பனை செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையானதாக காட்சியளித்தது. ஒரு கண்ணாடி போட்டிருந்தால் அவர் ஒரு மாபியாகும்பல்காரரைப் போல இருந்திருப்பார்.

மிகுந்த அச்சத்துடன் பேரரசர் வூ அந்த கேள்வியை கேட்டார். அதற்கு போதிதர்மர், “எதுவுமில்லை, எந்த பரிசுமில்லை அதற்கு பதிலாக நீ ஏழாவது நரகத்தில் விழ தயாராக இரு” என்று கூறினார். பேரரசர், “நான் எந்த தவறும் செய்யவில்லையே? எதற்காக ஏழாவது நரகம்? புத்த பிட்சுக்கள் கூறும் எல்லாவிஷயங்களையும் நான் செய்து வருகிறேனே” என்று கேட்டார். அதற்கு போதிதர்மர், “நீ உன்னுடைய சொந்த குரலை கேட்கத் தொடங்கும்வரை உனக்கு யாரும் உதவ முடியாது. அது புத்த மதத்தை சேர்ந்தவர்களாயினும் சரி, சேராதவர்களாயினும் சரி. மேலும் நீ இன்னும் உனது உள் குரலை கேட்கவில்லை. நீ அதைக் கேட்டிருந்தால் நீ இப்படி முட்டாள்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய்.

கௌதமபுத்தரின் பாதையில் எந்த வெகுமதியும் கிடையாது. ஏனெனில் வெகுமதிக்கான ஆசையே ஒரு பேராசையாக மனதிலிருந்துதான் வருகிறது. கௌதமபுத்தரின் முழு கற்பித்தலும் ஆசையற்ற தன்மையே. மேலும் புண்ணிய செயல்கள் என்று கூறப்படும் கோவில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுதல், ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவிடுதல் போன்ற எல்லா செயல்களும் உள் மனதில் ஒரு ஆசையோடு நீ செய்திருந்தால் நீ நரகத்தை நோக்கிச் செல்லும் உனது பாதையை தயார் படுத்துகிறாய். நீ இந்த செயல்களை உனது ஆனந்தத்தின் விளைவாக, உனது ஆனந்தத்தை முழு பேரரசுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தால், எந்த வெகுமதிக்குரிய ஒரு சிறு ஆசைகூட உனக்கு இல்லாமல் இருந்தால் அந்த செயலே அந்த செயலின் வெகுமதியாகும். இல்லாவிடில் நீ முழுவிஷயத்தையும் தவறவிட்டுவிடுகிறாய். என்றார்.

பேரரசர் வூ, “என் மனது எண்ணங்களால் நிரம்பி வழிகிறது. நான் எனது மனதை அமைதிபடுத்த முயன்று வருகிறேன், ஆனால் நான் தோற்றுவிடுகிறேன். இந்த எண்ணங்களாலும் அதன் சத்தத்தின் காரணமாகவும் நீங்கள் உள்குரல் என்று கூறும் விஷயத்தை என்னால் கேட்க முடியவில்லை. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. “ என்று கூறினார்.

போதிதர்மர், “அப்படியென்றால் நாளை அதிகாலை 4 மணிக்கு நான் மலையில் தங்கப்போகும் இடத்திற்க்கு எந்த மெய்க்காப்பாளனும் இல்லாமல் தனியாக வா. அங்கு நான் உனது மனதை எப்போதும் அமைதியோடு இருப்பதாக ஆக்கிவிடுகிறேன்“ என்று கூறினார்.

பேரரசர் இந்த மனிதர் உண்மையிலேயே வரம்புமீறிய மூர்க்கத்தனமானவர் என்று எண்ணினார். அவர் ஏராளமான பிட்சுக்களை சந்தித்திருக்கிறார். அவர்கள் மிகவும் பரிவு காட்டுபவர்கள். ஆனால் இவரோ ஒரு பெரிய தேசத்தின் பேரரசர் என்று கூட கவலைப்படவில்லை. மேலும் அதிகாலை இருட்டில் 4 மணிக்கு அவரிடம் செல்வது என்பது…………… மேலும் இந்த மனிதன் ஆபத்தானவனாக தோன்றுகிறான். போதிதருமர் எப்போதும் தன்னுடன் ஒரு கைத்தடியை வைத்திருப்பார். பேரரசர் முழு இரவும் தூங்கவில்லை. “போவதா? வேண்டாமா? இந்த மனிதன் என்ன வேன்டுமானாலும் செய்யக்கூடும், அவர் நம்பமுடியாத மனிதராக தோன்றுகிறார்” மற்றும் இன்னொரு பக்கம் அவரது இதயத்தின் ஆழத்தில் அவர் போதிதருமருடைய நேர்மையை உணர்ந்தார். அவர் நடிப்பவரல்ல, அவர் நீ ஒரு அரசர், தான் ஒரு புத்தபிட்சு என்பதைப்பற்றி ஒரு துளிகூட கவலைப்படவில்லை. அவர் தான் ஒரு பேரரசர் போலவும் அவருக்கு முன்பு நீ ஒரு பிச்சைக்காரன் என்பது போலவும் நடந்து கொள்கிறார். நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன் என்று சொன்ன விதமும்……

பேரரசருக்கு புதிராயிருக்கிறது, ஏனெனில் “இந்தியாவிலிருந்து வரும் ஞானவான்களை கேட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு யுக்திகளையும் வழிமுறைகளையும் அளித்தனர், அவற்றை நான் பயிற்சி செய்து வருகிறேன், ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த புதிய மனிதன் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல, மது அருந்தியவனைப்போல, அவ்வளவு பெரிய கண்களையுடைய, பயத்தை உருவாக்கக்கூடிய ஒரு வித்தியாசமான முகத்தைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவர் நேர்மையானவராகவும் தோன்றுகிறார். அவர் ஒரு காட்டுத்தனமான மனிதன். ஆனால் இந்த அபாயம் தகுதியுடையதே.! அவர் என்ன செய்யக்கூடும், அதிகபட்சம் அவர் என்னைக் கொல்ல முடியும்” என்று எண்ணினார். முடிவில் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில் ‘அந்த மனிதன் நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன்’ என்று வாக்களித்துள்ளார்.

பேரரசர் வூ அதிகாலை 4 மணிக்கு தனியாக இருளில் அவரது இடத்தைச் சென்றடைந்தார். அந்த கோவில் படிகளில் போதிதர்மர் அவருடைய தடியுடன் நின்று கொண்டிருந்தார், அவர், “இரவு முழுவதும் போவதா வேண்டாமா என்று குழம்பினாலும் நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒரு ஏழை பிட்சுவைப் பார்த்து, ஒரு ஏழை பிச்சைக்காரனைப்பார்த்து, இந்த உலகத்தில் ஒரு தடியைத் தவிர ஏதும் இல்லாதவனைப் பார்த்து இவ்வளவு பயப்படும் நீ எப்படிப்பட்ட பேரரசன் ?  நான் இந்த தடியை வைத்து உனது மனதை அமைதியாக்கப் போகிறேன். “ என்று கூறினார்.

பேரரசர், “கடவுளே ஒரு தடியை வைத்து மனதை அமைதிபடுத்துவதை யாராவது எப்போதாவது கேள்விபட்டதுண்டா? அவனை முடித்துவிடலாம், தலையில் ஓங்கி அடிக்கலாம், பிறகு முழு மனிதனும் அமைதியாகிவிடுவான். ஆனால் மனம் அமைதி அடையாதே. ஆனால் இப்போது திரும்பி போவது என்பது முடியாத காரியம்” என எண்ணினார்.

போதிதர்மர், “இங்கே கோவில் வராண்டாவில் உட்கார், சுற்றிலும் ஒரு மனிதன் கூட இல்லை, கண்களை மூடிக்கொள், உனக்கு முன்னால் நான் எனது தடியுடன் உட்கார்ந்து கொள்கிறேன். மனதை பிடிப்பதே உனது வேலை. வெறுமனே உனது கண்களை மூடிக்கொண்டு உள்ளே சென்று அது எங்கே இருக்கிறதென்று தேடு. நீ அதனை பிடிக்கிற நொடியில் வெறுமனே எனக்கு அது இங்கே இருக்கிறதென்று கூறு, மற்றதை எனது தடி பார்த்துக்கொள்ளும்” என்று கூறினார்.

உண்மையை, அமைதியை, மௌனத்தை தேடும் தேடுதலையுடையவன் அடையக்கூடிய, அடைந்த அனுபவங்களிலேயே மிகவும் வித்தியாசமான அனுபவம் அது. பேரரசர் வூக்கு இப்போது வேறு வழியில்லை. கண்களை மூடி அங்கே அமர்ந்தார். போதிதர்மர் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை பேரரசர் நன்றாக உணர்ந்தார். அவர் தன்னுள்ளே எல்லாபக்கமும் தேடினார், அங்கு மனமில்லை. அந்த தடி அதன் வேலையை செய்துவிட்டது.

முதன்முறையாக அவர் அப்படி ஒரு சூழலில் இருந்தார். செய்தாகவேண்டும்

…… நீ மனதை ஒருவேளை கண்டுபிடித்தால், இந்த மனிதன் அவருடைய தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று உனக்குத் தெரியாது. மேலும் அந்த மௌனமான மலைப்பகுதியில், போதிதர்மருடைய இருப்பில்…. அவருக்கென ஒரு சக்தி வட்டமிருந்தது……. பல ஞானமடைந்த மக்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் போதிதர்மர் தனியாக எதிலும் ஒட்டாமல் எவரெஸ்ட் சிகரம் போல தனித்து நிற்கிறார். அவருடைய ஒவ்வொரு செயலும் தனித்துவமானது மற்றும் ஆணித்தரமானது. அவருடைய ஒவ்வொரு அசைவும் அவருடைய சொந்த கையெழுத்தைக் கொண்டது, அது கடன் வாங்கப்பட்டதல்ல.

பேரரசர் மனதை கடுமையாகத் தேடினார், ஆனால் முதன்முறையாக அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறிய தந்திரம். நீ ஒருபோதும் உன் மனதை தேடாததால் மட்டுமே அது அங்கே இருக்கிறது. நீ ஒருபோதும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதில்லை என்பதாலேயே அது அங்கே இருக்கிறது. நீ அதைத் தேடும்போது, நீ அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருக்கும்போது விழிப்புணர்வு நிச்சயமாக அதனை முழுமையாக கொன்று விடுகிறது.

மணிநேரங்கள் கடந்துவிட்டன. சூரியன் மௌனமாக மலைகளின் மீது, ஒரு குளிர்ந்த தென்றலுடன் உதயமாகிக்கொண்டிருக்கிறான். போதிதர்மரால் பேரரசர் வூ வின் முகத்தில் அப்படி ஒரு அமைதியையும், அப்படியொரு மௌனத்தையும், அப்படியொரு அசைவற்ற தன்மையையும் அவர் ஒரு சிலையைப் போல இருப்பதையும் பார்க்க முடிந்தது. போதிதர்மர் வூ வை உலுக்கி, நிறைய நேரமாகிவிட்டது. நீ மனதை கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டார்.

பேரரசர் வூ, “உங்களது தடியை உபயோகிக்காமலேயே நீங்கள் எனது மனதை முழுமையாக அமைதிபடுத்திவிட்டீர்கள். எனக்கு எந்த மனமுமில்லை, நீங்கள் கூறிய உள் குரலை நான் கேட்டேன். இப்போது நீங்கள் கூறியது சரி என்று நான் உணர்கிறேன். எதையும் செய்யாமலேயே நீங்கள் என்னை நிலை மாற்றமடையச் செய்துவிட்டீர்கள். இப்போது எல்லா செயல்களுக்கும் அதைச் செய்வதே அதன் வெகுமதியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் அதனை செய்ய வேண்டியதில்லை என்று நான் உணர்ந்து கொண்டேன். உனக்கு வெகுமதியளிக்க அங்கு யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைதனமான சிந்தனை, அங்கு தண்டனை கொடுக்க யார் இருக்கிறார்கள்? உன்னுடைய செயலே தண்டனை. உன்னுடைய செயலே வெகுமதி. நீ சென்றடையும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடமே உள்ளது என்பதை நான் அறிவேன் இப்போது.” என்று கூறினார்.

போதிதர்மர், “நீ ஒரு அபூர்வமான சீடன். வெறும் ஒரு அமர்தலிலேயே மனதின் எல்லா இருட்டும் மறைந்துவிடும் அளவிற்கு விழிப்புணர்வையும் மிகுந்த ஒளியைக் கொண்டுவரும் துணிச்சலும் உள்ள மனிதனாக இருக்கிறாய். நான் உன்மீது அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை மதிக்கிறேன், ஆனால் ஒரு பேரரசனாக அல்ல.” என்று கூறினார்.

வூ அவரை அரண்மனைக்கு வருமாறு வற்புறுத்தினார். போதிதர்மர், “அது என்னுடைய இடமல்ல, நான் காட்டுத்தனமானவன். நான் என்ன செய்வேன் என்று எனக்கேத் தெரியாது என்பதை நீ பார்க்கலாம். நான் நொடிக்கு நொடி இயல்பாக வாழ்கிறேன். நான் மிகவும் கணிக்க இயலாதவன். நான் தேவையில்லாமல் உனக்கும் உனது சபைக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். நான் அரண்மனைகளுக்காக ஆக்கப்பட்டவனல்ல. என்னை என்னுடைய காட்டுத்தனத்தில் வாழவிடு.” என்று கூறினார்.

இரண்டாவது செவிவழி செய்தி என்னவென்றால் டாய் என்ற பெயர் கொண்ட இந்த மலையில் வசித்த போதிதர்மர்தான் தேநீரை உருவாக்கிய முதல் மனிதர் என்பதாகும். டீ என்னும் பெயர் டாய் என்னும் பெயரிலிருந்து வந்ததாகும். ஏனெனில் அது டாய் என்னும் மலையில் உருவாக்கப்பட்டது. எல்லா மொழியிலும் உள்ள தேநீரை குறிக்கும் சொற்கள் ஒரே மூலத்திலிருந்தே வந்துள்ளன. ஆங்கிலத்தில் அது டீ, ஹிந்தியில் அது சாய், சைனீஸ் வார்த்தை ச்சா என்றும் கூறப்படுகிறது. மராத்தியில் அது ச்சா என்றழைக்கப்படுகிறது.

போதிதர்மர் தேநீரை உருவாக்கிய விதம் சரித்திரபூர்வ உண்மையாக இருக்க முடியாது. ஆனால் அது முக்கியத்துவமானது. அவர் கிட்டதட்ட எல்லா நேரங்களிலும் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் இரவில் சில நேரங்களில் தூங்கத் தொடங்கி விடுவார். எனவே தூங்காமல் இருப்பதற்காக, அவருடைய கண்களுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுப்பதற்காக அவரது கண் இமைகளின் முடிகள் அனைத்தையும் பிடுங்கி அவர் கோவில் நிலத்தில் எறிந்து விட்டார். கதை என்னவென்றால் இந்த கண் இமைகளிலிருந்துதான் தேநீர் செடி வளர்ந்தது. அவைதான் முதல் தேநீர் செடிகள். அதனால்தான் தேநீரை குடித்தபிறகு உன்னால் தூங்க முடியாது. மேலும் புத்த மதத்தில் தியானத்திற்காக தேநீர் அருந்துவது பழக்கமாகி விட்டது. தேநீர் மிகவும் உதவி புரியக் கூடியது. எனவே முழு புத்த உலகமும் தியானத்தின் ஒரு பகுதியாக தேநீர் அருந்துகிறது. ஏனெனில் அது உன்னை சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் வைத்திருக்கிறது. இரண்டு லட்சம் புத்த மத பிட்சுக்கள் சீனாவிலிருந்தாலும் கூட போதிதர்மர் தனது சீடர்களாக ஏற்றுக் கொள்ள தகுதியுடையவர்களாக நான்கு பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. அவர் உண்மையாகவே மிகவும் குறிப்பாக தேர்ந்தெடுத்தார். அவரது முதல் சீடரான ஹூய்கோவை கண்டுபிடிக்க அவருக்கு கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் பிடித்தது. இது ஒரு சரித்திர உண்மை. ஏனெனில் மிகவும் பழமையான குறிப்புகள் உள்ளன.

கிட்டதட்ட போதிதர்மருடைய காலத்திய குறிப்புகள் எல்லாவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றவை குறிப்பிட படா விட்டாலும் வூ வை அரண்மனைக்கு திருப்பி அனுப்பிய பிறகு அவர் கோவில் சுவற்றைப் பாரத்தபடி அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடப்படுள்ளது. அவர் அதனை ஒரு சிறந்த தியானமாக ஆக்கிக் கொண்டார். அவர் வெறுமனே எளிமையாக சுவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார். அதிகநேரம் நீ சுவற்றை பார்த்துக் கொண்டேயிருந்தால் உன்னால் யோசிக்க முடியாது. மெதுமெதுவாக அந்த சுவற்றைப் போலவே உனது மனதின் திரையும் காலியாகி விடுகிறது.

மேலும் அதற்கு இரண்டாவது காரணமும் இருந்தது. என்னுடைய சீடனாக இருக்கும் தகுதியுடைய யாராவது ஒருவர் வரும்வரை நான் யாரையும் பார்க்க மாட்டேன் என அவர் அறிவித்தார். மக்கள் வருவார்கள், அவருக்கு பின் அமர்வார்கள். அது ஒரு வித்தியாசமான சூழ்நிலை. இந்த முறையில் யாரும் பேசியதில்லை. அவர் சுவற்றிடம் பேசுவார். மக்கள் அவருக்கு பின் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அவர் வருபவர்களை பார்க்க மாட்டார். ஏனெனில் அவர் வருபவர்கள் என்னை அதிகமாக காயப்படுத்துகிறார்கள். அவர்கள் வெறும் சுவறைப் போல இருக்கிறார்கள். யாரும் புரிந்து கொள்வதில்லை. இப்படிப்பட்ட ஒரு அறியாமை நிலையில் மக்களைப் பார்ப்பது ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையான ஒரு சுவறைப் பார்ப்பது கேள்வியேயில்லை. ஒரு சுவர் எப்படியிருந்தாலும் அது சுவரே. அது கேட்க முடியாது. எனவே காயப்பட தேவையில்லை. யாராவதொருவர் அவருடைய செயலின் மூலம் அவர் எனது சீடராக தயாராக இருக்கிறார் என்று நீரூபித்தால் மட்டுமே நான் வருபவர்களைப்பார்த்து திரும்புவேன் என்று கூறினார், ஒன்பது வருடங்கள் கடந்து விட்டன. மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எந்த செயல் அவருக்கு திருபதியளிக்கும் என்று அவர்களால் கண்டறிய முடியவில்லை. பிறகு அந்த இளைஞன் ஹூய்கோ வந்தான். அவன் அவனுடைய கைகளில் ஒன்றை வாளால் வெட்டி அந்தக் கையை போதிதர்மர் முன் வீசிவிட்டு, இது ஆரம்பம்தான். நீங்கள் திரும்புங்கள் அல்லது என் தலை உங்கள் முன் உருளும். நான் எனது தலையையும் வெட்டப்போகிறேன் என்றான்.

போதிதர்மர் திரும்பி, நீ எனக்கு சீடனாக தகுதியுடைய மனிதன். தலையை வெட்ட வேண்டியதில்லை. நாம் அதனை உபயோகப்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த மனிதன் ஹூய்கோதான் அவரது முதல் சீடர். முடிவில் போதிதர்மர் சீனாவை விட்டு செல்லும்போது அவர் ஹூய்கோவிற்குப்பிறகு மேலும் மூன்று சீடர்களை சேர்த்திருந்தார். அவர் சீனாவை விட்டு செல்ல முடிவெடுத்த பிறகு தனது நான்கு சீடர்களையும் அழைத்து, எளிமையான வார்த்தைகளில், சிறிய வாக்கியங்களில், தந்தி முறையில் என்னுடைய போதனைகளின் மூலத்தைக் கூறுங்கள். நாளைக்காலையில் நான் இமயமலைக்கு திரும்பிச் செல்ல முடிவெடுத்துள்ளேன். அதனால் உங்கள் நால்வரில் ஒருவரை வாரிசாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். என்றார்.

முதலாமவன், மனதை தாண்டிச் செல்வது, முற்றிலும் மௌனமாக இருப்பது, அதன்பிறகு அனைத்தும் தானாகவே நடக்கிறது எனக் கூறினான். போதிதர்மர், நீ கூறியது தவறல்ல, ஆனால் நீ என்னை திருப்திபடுத்தவில்லை. உன்னிடம் எனது தோல் உள்ளது என்றார்.

இரண்டாமவன், நான் இல்லை, பிரபஞ்சம் மட்டுமே உள்ளது, என்பதை அறிந்து கொள்வதே உங்களது அடிப்படையான போதனை என்றான்.

போதிதர்மர், சிறிது பரவாயில்லை, ஆனால் அது எனது தகுதியளவிற்கில்லை. உன்னிடம் எனது எலும்புகள் உள்ளன. என்றார்.

மூன்றாவது மனிதன், அதைப்பற்றி ஏதும் சொல்ல முடியாது. எந்த வார்த்தையும் அதை கூறும் சக்தியற்றது என்றான். போதிதர்மர், நன்று, ஆனால் நீ ஏற்கனவே அதைப் பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டாய் உனக்கு நீயே முரண்பட்டு விட்டாய் வெறுமனே உட்கார். உன்னிடம் எனது சதை உள்ளது என்றார்

நான்காவதாக அவரது முதல் சீடன் ஹூய்கோ அவரது காலில் விழுந்தான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. போதிதர்மர், நீ அதை சொல்லிவிட்டாய். நீதான் எனது வாரிசாகப் போகிறாய் என்றார்.

ஆனால் இரவில் ஏதோ ஒரு சீடன் அவன் வாரிசாக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதற்காக அவருக்கு விஷமளித்துவிட்டான்.

எனவே அவர்கள் அவரை புதைத்தனர். ஆனால் வித்தியாசமான மூன்றாவது செவிவழி செய்தி என்னவென்றால் ஒரு அரசாங்க அதிகாரி மூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு வெளியே இமயமலையை நோக்கி போதிதர்மர் நடந்துபோய்க் கொண்டிருப்பதை பார்த்தார். போதிதர்மருடைய கையில் அவருடைய தடியிருந்தது. மேலும் அவருடைய செருப்பு அந்த தடியிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் அவர் வெறும் காலில் நடந்து கொண்டிருந்தார். அந்த அதிகாரிக்கு அவரைத் தெரியும். அந்த அதிகாரி அவரிடம் பலமுறை வந்திருக்கிறார். அவர் ஒருமாதிரி இருந்தாலும்கூட போதிதர்மர் மீது அந்த அதிகாரி அன்பு செலுத்தினார். அதிகாரி அவரிடம் இந்த தடிக்கும் இதில் ஒரு செருப்பு தொங்குவதற்கும் என்ன அர்த்தம் என்று கேட்டார். போதிதர்மர் விரைவில் நீ அறிந்து கொள்வாய். நீ எனது மக்களை சந்தித்தால் வெறுமனே அவர்களிடம் நான் ஒரேடியாக இமயமலைக்கு செல்கிறேன் என்று கூறிவிடு என்று கூறினார்.

அதிகாரி, அவரால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக போதிதர்மர் வாழ்ந்து கொண்டிருந்த மலையில் இருக்கும் மடாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் போதிதர்மருக்கு விஷம் வைக்கப்பட்டதையும் அவர் இறந்து விட்டதையும் கேள்விப்பட்டார். அங்கு அவரது சமாதியிருந்தது. அதிகாரி பேரரசரின் எல்லைப்பகுதியில் நியமிக்கப்பட்ட காரணத்தால் இதைப்பற்றி கேள்விப்பட வில்லை. அவர், கடவுளே, நான் அவரைப் பார்த்தேன். நான் ஏமாந்திருக்க முடியாது. ஏனெனில் நான் முன்பே அவரை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் அதே மனிதன்தான். அதே கோபக்கண்கள், அதே தீப்போன்ற காட்டுத்தனமான உருவம், மேலும் உச்சக்கட்டமாக அவர் அவருடைய தடியில் அவருடைய ஒரு செருப்பை சுமந்திருந்தார் என்று கூறினார்.

சீடர்களால் அவர்களது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது சமாதியைத் திறந்தனர். அவர்கள் அங்கு கண்டதெல்லாம் ஒரே ஒரு செருப்பு மட்டுமே. அந்த காரணத்தை விரைவில் நீ அறிந்து கொள்வாய் என்று போதிதர்மர் ஏன் கூறினார் என்று அந்த அதிகாரி புரிந்து கொண்டார்.

நாம் யேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி மிகவும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யாரும் அதிகமாக போதிதர்மரின் உயிர்த்தெழுந்தது பற்றி பேசுவதில்லை. ஒருவேளை அவர்கள் அவரை புதைத்தபோது அவர் கோமாவில் இருந்திருக்கலாம், அவர் சுயநினைவுக்கு வந்தவுடன் சமாதியிலிருந்து வெளியே வந்து ஒரு செருப்பை அங்கேயே விட்டுவிட்டு இன்னொரு செருப்பை அவரது தடியில் கட்டிக் கொண்டு திட்டமிட்டப்படி அவர் சென்று விட்டார்.

அவர் அழிவற்ற இமயமலையின் பனிக்கட்டிகளில் இறக்க விரும்பினார். அவர் அவரைக் குறித்து எந்த சமாதியும், எந்த சிலையும் இருக்கக்கூடாது என விரும்பினார். அவர் அவருக்கு பின்பு தொழுவதற்கு எந்த காலடி தடத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரை நேசிப்பவர்கள் அவரது சொந்த இருப்பினுள் நுழைய வேண்டும். நான் தொழப் போவதில்லை மற்றும் அவர் கிட்டதட்ட காற்றில் மறைந்துவிட்டார். என்ன நடந்தது, எங்கு அவர் இறந்தார் என்பது குறித்து யாரும் எதையும் கேள்விப்படவில்லை. அவர் கண்டிப்பாக இமயமலையின் அழிவற்ற பனிகளில் எங்கோ புதைந்திருக்கவேண்டும்.

1 comment:

Powered by Blogger.

Popular Posts