யார் குரு?

மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில்
ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர்
கேட்டார்.

அதற்கு அவர், மிக தாமதமாக இந்த
கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று
கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர், 
நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள்,
இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை
மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.

அதற்கு ஹாசன் எனக்கு
ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு
பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று
பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை
நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு
இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன.
கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான்
விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில்
உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன்.

நான் அவரிடம், நான் தங்க இங்கே
ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி
ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம்.
ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு
எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார். 

நான் கொஞ்சம் ஒரு வினாடி
தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது
ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச
வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன்.
நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன்,
மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு
இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள்,
தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார்.
அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும்
கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும்
அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.

ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும்
கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர்
நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும்
எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள்
கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

மேலும் தொடர்ந்து ஹாசன்
சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில்
எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும்
நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை,
எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் –
அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள்
விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன். 

அதனால் மேலும் ஒருநாள் முயற்சி
செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு
நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும்
ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி
நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள்
என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே
விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம்
அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல்
குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய்.
நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க்
கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது.
அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய்
இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது
குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே
திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது,
தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால்
தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை
குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது.
நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி
வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும்
என்பதை புரிந்து கொண்டேன்.

நான் அறியாததற்குள் குதித்து
விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப்
பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது
எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது.
ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது
மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு
குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை
ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக
ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது
அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை
ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி
எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது,
நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து
வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு,
மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று
பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான்.
என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த
வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன்
என்பதை விட்டு விட்டேன். என்றார்.

ஹாசன் மூன்று குருக்களைப் பற்றி
கூறினார். மேலும் அவர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் பற்றியும்
பேச எனக்கு நேரம் இல்லை என்றார்.

ஆம், அது உண்மை. எனக்கு
ஒருவர்தான் குரு என்று கிடையாது. ஏனெனில் எனக்கு ஆயிரக்கணக்கான குருக்கள்
இருக்கின்றனர். நான் சாத்தியப்பட்ட எல்லா வழிகளிலும் கற்றுக் கொண்டேன்.

நீ அப்படிப்பட்ட விதமான ஒரு சீடன்
என்றால் உனக்கு குரு என்று ஒருவர் தேவை இல்லை. ஆனால் நினைவில் கொள், குரு என்ற
ஒருவர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீ தேர்ந்தெடுத்தாலும் சரி,
தேர்ந்தெடுக்காமல் எல்லோரையும் வைத்துக் கொண்டாலும் சரி, நீ ஒரு சீடனாக இருக்க வேண்டியது
அவசியம்.

சீடனாக இருப்பது இந்த பாதையில்
மிக அவசியமான ஒரு விஷயம்.

சீடனாக இருப்பது என்றால் – கற்க
முடிவது, கற்க தயாராக இருப்பது, இந்த இயற்கைக்கு திறந்தவனாக இருப்பது. நீ ஒரு
குருவை தேர்ந்தெடுக்கும் போது என்ன நிகழ்கிறது எப்படி கற்றுக் கொள்வது என கற்றுக்
கொள்ள ஆரம்பிக்கிறாய். ஒரு குருவுடன் இருக்கும்போது நீ மெதுமெதுவாக லயப்பட
ஆரம்பிக்கிறாய். மெதுமெதுவாக நீ இயற்கையுடன் லயப்படுவது எப்படி என கற்றுக்
கொள்கிறாய்.

குரு என்பவர் இந்த இயற்கையின்
சிறிய வடிவம்தான். குருவுடன் நெருங்கி வர வர நீ அழகு, நேசம், நெருக்கம், அணுக்கம்,
அன்யோன்யம், ஒப்புக்கொடுத்தல் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்கிறாய். ஒருவரிடம்
ஒன்றாக இருக்கும்போது இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும்போது முழுமையுடன் ஒன்றாக
இருக்கும்போது எவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும்.
குரு என்பவர் ஒரு ஆரம்பம்தான், அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு
வாசல்தான், நீ அவர் மூலம் சென்று கடந்து போக முடியும். உண்மையான குரு நீ அவரை
கடந்து செல்ல உதவுபவர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts