ஜென் கதைகள்: ஒரு சமையல்காரனின் கவிதை

ஜென் துறவி ஒருவர். மிகவும் வயது முதிர்ந்தவர். பொதுவாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது.

ஆகவே, அவர் தனது சிஷ்யர்களை அழைத்தார். ‘எனக்குப்பின் இந்த ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போவது யார் என்று தீர்மானிக்கவேண்டும்’ என்றார். அதற்கு ஒரு போட்டியும் அறிவித்தார்.

போட்டி இதுதான்: சிஷ்யர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கவிதை எழுதித் தரவேண்டும், அதில் சிறந்த கவிதை எதுவோ அதை எழுதியவர்தான் ஆசிரமத்தின் புதிய தலைவர்.

உடனடியாக, சிஷ்யர்கள் கவிதை எழுத உட்கார்ந்தார்கள். சிறந்த சொற்கள், அற்புதமான கருத்துகள், பிரமாதமான சிந்தனைகளைக் கொட்டி நிரப்பிய பல கவிதைகளை அவர்கள் எழுதிச் சமர்ப்பித்தார்கள்.

அந்தத் துறவி எல்லாக் கவிதைகளையும் படித்தார். கடைசியாக அவர் தேர்ந்தெடுத்தது, ஒரு சமையல்காரனின் கவிதையை!

‘என்னது? இந்தச் சமையல்காரனா எங்களுக்கெல்லாம் குரு?’ மற்ற சிஷ்யர்கள் அதிர்ந்துபோனார்கள். ‘இதை நாங்கள் ஏற்கமுடியாது!’

‘நான் வைத்த போட்டியில் அவனுடைய கவிதைதான் வெற்றி பெற்றிருக்கிறது. அவர்தான் அடுத்த குருநாதர்’ என்றார் துறவி. சிஷ்யர்கள் எத்தனை முரண்டு பிடித்தபோதும் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதனால் எரிச்சலடைந்த சிஷ்யர்கள் அந்தச் சமையல்காரரைக் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட துறவி அவரை ரகசியமாக அழைத்தார். தன்னுடைய மேலாடை மற்றும் பாத்திரத்தை அவரிடம் கொடுத்து வாழ்த்தினார்.

அன்று இரவு, அந்தச் சமையல்காரர் ஆசிரமத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். வேறோர் கிராமத்தில் சென்று தங்கிக்கொண்டு தியானமும் கல்வியுமாக நேரம் செலவிட்டு ஞானம் பெற்றார், பெரிய ஜென் மாஸ்டரானார்!

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts