ஜென் கதைகள்: வில்லாண்மைத் திறன் போட்டி

ஒரு வாலிபன் பல வில்வித்தைப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய வில்லாண்மையை காட்டி பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருந்தான். ஆனால் அந்த பாராட்டுகளும், பரிசும் பண்பினை உருவாக்காமல் அவனுக்கு கர்வமும், தலைக்கணமும் ஏறுவதற்கு காரணமாக அமைந்தது. தற்பெருமை கொண்ட அவன் அந்த ஊரில் வில்வித்தையில் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஸென் ஆசிரியரிடம் சென்று தானே வில்வித்தையில் சிறந்தவன் என்று கூறி தன்னுடன் போட்டியிட வருமாறு அழைத்தான்.

வாலிபனுக்கு நிஜமாகவே அருமையான வில்வித்தை தெரிந்திருந்தது. வில்லிலே அம்பினை பூட்டியவன் முதல் முறையிலேயே தூரத்தில் இருந்த ஒரு பொம்மை மாட்டின் கண்களை சரியாக குறிபார்த்து நேர்த்தியாக அம்பு எய்தினான். தன்னுடைய இரண்டாவது அம்பானது, முதல் அம்பினை இரண்டாக பிளக்குமாறு செலுத்தினான். "ஆ, அதைப் பார்" என்று சுட்டிக் காட்டியவன், "உன்னால் எனக்கு நிகராக குறிபார்த்து வில்லாள் அடிக்க முடியுமா? எங்கே உன் திறமையைக் காட்டு" என்று ஆசிரியரைப் பார்த்து ஆனவத்துடன் கேட்டான்.

வாலிபனுடைய பேச்சினைக் கேட்டு கொஞ்சமும் தடுமாறாமல், தன்னுடைய அம்பினை உறியிலிருந்து எடுக்காமல், இளைஞனைப் பார்த்து கைகளால் சாடையாக தன்னை பின்பற்றி வருமாறு கூறிவிட்டு முன்னோக்கி நடக்கலானார். ஆசிரியரினுடைய விருப்பம் என்னவாக இருக்கும் என்று நினைத்தவாறே, வாலிபன் அவரை பின் தொடர்ந்து ஒரு மலையின் மீது ஏறினான். மலையின் மீது ஒரு கிடுகிடு ஆழமான பள்ளம் இருந்த இடத்திற்கு வந்தார்கள். செங்குத்தான பாறைகளில் இரண்டாக பிளவு பட்டு இருந்த இடத்தில் எந்த விதமான பிடிமானமும் இல்லாமல் அதிலிருந்து மேல் நோக்கி வளர்ந்திருந்த ஒரு மரமானது பட்டுப் போயிருந்தது. தன்னுடைய பாதையிலிருந்து விலகி அந்த பட்டுப் போன மரத்தின் மீது அமைதியாக ஏறியவர் தூரத்தில் தெரிந்த மற்றொரு மரத்தினை நேராக குறிபார்த்து ஒரே தடவையில் சரியாக அம்பினை எய்தினார். "இப்பொழுது உன்னுடைய முறை" என்று கூறியவர் கவனமாகவும் நேர்த்தியாகவும் அந்த மரத்திலிருந்து அமைதியாக இறங்கி அவனுக்கு வழிவிட்டார்.

கிழே ஆழங்கான முடியாத கிடுகிடு பாதளம். வளர்ந்திருந்த மரமோ பட்டுப் போனது எப்பொழுது முறியலாம் என்று காத்திருப்பது போல் தோன்றியது. நடந்து அந்த மரத்தில் ஏற முயற்சித்தவனுடைய கால்களோ சரசரவென வழுக்கியது. அவனால் பயத்தில் அந்த பட்டுப் போன மரத்தில் ஏறவே முடியவில்லை, எங்கே வில்லை எடுத்து, நாணினை முடுக்கி அம்பினை எய்தப் போகிறான். தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தலையை தொங்கப் போட்டான்.

வாலிபனின் இக்கட்டான நிலையைப் பார்த்த ஸென் ஆசிரியர், "உனக்கு அம்பு எய்துவதில் சிறந்த திறமை இருக்கிறது, ஆனால் அதனை ஒரு முகப்படுத்தி குறிபார்த்து எய்யக் கூடிய மனதினைக் கட்டுப் படுத்துவதில் இன்னும் உனக்கு திறமை போதவில்லை" என்றுக் கூறினார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts